
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் நீண்ட காலமாக திருத்தப்படாமல், பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளை புனரமைக்கும் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மிக மோசமாக பழுதடைந்திருந்த வீதிகளை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்ததற்கிணங்க, அமைச்சரினால் 2024ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1.7 கிலோ மீட்டர் வீதியின் புனரமைப்புக்கென 25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் இவ்வீதியின் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வு அனலைதீவு இறங்குதுறைக்கு அருகில் நடைபெற்றது.
இதன்போது, அமைச்சரின் சார்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன், கட்சியின் ஊர்காவற்றுறை நிர்வாக பொறுப்பாளரும் முன்னாள் தவிசாளருமான மருதயினார் ஜெயகந்தன், துறைசார் அதிகாரிகள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.