
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வியாழக்கிழமை (28) வரை 3,372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த மாவட்டத்தில் 14 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 254 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றோம்.
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் கடலுக்குச் சென்று உயிரிழந்த சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது என்றார்.
வெள்ள நிலைமை தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவிக்கையில்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரதேச செயலக ஊழியர்கள், முப்படையினர், சுகாதாரப் பிரிவினர் மற்றும் சமய சமூக அமைப்புக்கள் என அனைவரும் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் உள்ளனர்.
சேருவில மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மகாவலி ஆற்றின் பெருக்கெடுப்பால் அதிகமான கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுத்து தயார்ப்படுத்தி வைத்திருக்கிறோம்.
மேலும், வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து நீரை கடலுக்குள் வெளியேற்றுவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம் என்றார்.