நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 10 மணி வரையான காலப்பகுதியில் 344 குடும்பங்களை சேர்ந்த 1,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
மேலும், 204 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் அங்கு வசித்துவரும் 117 குடும்பங்களைச் சேர்ந்த 462 பேர் ஒன்பது தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா கொட்லோட்ஜ் தோட்டம் சமர்ஹில் பாடசாலையில் அமைந்துள்ள தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் கோவிலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பௌத்த வழிபாட்டுத் தலத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாதுகாப்பான இடத்தில் 14 குடும்பங்களில் 54 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை குருதுஓயா அல்மா பாலர் பாடசாலையில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொத்மலை டன்சினன் கொரெஞ்சி பாடசாலையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஹகுரன்கெத்த திகலஹின்ன சனசமூக மண்டபம் மற்றும் ஹோப் பிரிவு தோட்ட நிலையங்களிலும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, திகலஹின்ன சனசமூக மண்டபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் ஹோப் பிரிவு தோட்டக் கட்டடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 08 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தலவாக்கலை பொட்மோர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிலையத்தில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை நகரசபை ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.