
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 232 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
பதுளை, அம்பாறை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் அனர்த்தத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 289 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 42 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 20 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 103 வீடுகள் முழுமையாகவும் 2,152 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
நாடளாவிய ரீதியில் 341 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்து 334 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 594 பேர் அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 45 ஆயிரத்து 415 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 628 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.