நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமாம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, செப். 24: நாட்டிலுள்ள கோழிப்பண்ணைகளில் முட்டையிடும் கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், வரும்காலத்தில் நாட்டில் முட்டைகளுக்கு கணிசமான தட்டுப்பாடு ஏற்படும் என்று அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "கோழிப்பண்ணை தொழிலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தமது தொழிலை கைவிட்டுள்ளனர். கால்நடை தீவன விலை அதிகரித்துள்ளதால், முட்டைகளை விற்பனை செய்து கிடைக்கும் லாபத்தில் தீவனங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போதுள்ள முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார்கள்.

இனப்பெருக்க நோக்கத்திற்காக அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் 80,000 முட்டையிடும் கோழிகளை இறக்குமதி செய்வது வழக்கம். ஆனால், ஆனால் இந்த ஆண்டு 9,000 கோழிகள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டன.

எனவே, நாட்டில் கோழிக்குஞ்சுகளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால், முட்டை களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றார் அவர்.