கோடிக் கணக்கில் பண மோசடி: நடிகை ஜெக்குலினுக்கு பிணை

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

மும்பை, செப்.26

ரூ.200 கோடி இந்திய ரூபா பணத்தை அச்சுறுத்தி பறித்த வழக்கில் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அமலாக்க இயக்குனரகம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் 200 கோடி ரூபா பணத்தை மோசடியாக பெற்ற குற்றச்சாட்டில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சட்ட அமுலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பொலிவூட் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இராணி என்பவரது பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரும் விசாரணைக்கு முன்னிலையாகி காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கினர்.

விசாரணையின் முடிவில் ஜாக்குலின் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஜாக்குலின் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதன்போது, முன் பிணை கோரி அவரது சட்டத்தரணிகள் குழு மனு தாக்கல் செய்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஜாக்குலினுக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.