புகைப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் செயற்திட்டம் ஆரம்பம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையில் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டமொன்று சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகளின்படி ஆண்களில் இருவரில் ஒருவர் புகைத்தல் பழக்கமுடையவர்களென உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 2030ஆம் ஆண்டு அந்த விகிதத்தை 5 சதவீதமாக குறைப்பதே இதன் நோக்கமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத் திட்டத்திற்கு பிரிட்டன் 20 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. ஆண்களை புகைத்தல் பழக்கத்திலிருந்து விடுவிக்கும் வகையில் 15 நாடுகளில் ஐந்தாண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கவுள்ளதாகவும், இலங்கை அதில் முதலிடத்திலுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

புகையிலை பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பாக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களிலும் அது தொடர்பான சட்டங்களை அமுல்ப்படுத்துவதிலும் முன்னேற்றத்தைக் காண முடிவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது சுமார் 35,000 பேர் புகையிலை செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு புகையிலை செய்கையை முற்றாக நிறுத்த சுகாதார அமைச்சு எதிர்பார்த்திருப்பதாகவும், உள்நாட்டில் புகைத்தல் பழக்கம் காரணமாக வருடாந்தம் 25,000 பேர் மரணமடைகின்றார்கள். 5 சதவீதமான பிள்ளைகளும் அதனால் பாதிப்புக்குள்ளாவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே சிகரெட் பெட்டிகளில் 80 சதவீதம் படத்துடன் கூடிய புகைத்தல் பற்றிய எச்சரிக்கை அச்சிடப்பட்டுள்ளது. புகையிலைக்கு 90 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகிலேயே புகையிலைக்கு அதிக வரி இலங்கையில்தான் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளினால் உள்நாட்டில் புகைத்தல் பழக்கமுடையவர்களின் எண்ணிக்கை தற்போது 46 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் சில நடவடிக்கைகளை சட்டரீதியாக முன்னெடுக்கவுள்ள நிலையில் இந்த சதவீதத்தை மேலும் குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.