கிழக்கு மாகாணமானது முதலீட்டுக்கு வசதி வாய்ப்பானது – மாகாண ஆளுனர்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கிழக்கு மாகாணமானது முதலீட்டுக்கு தேவையான பல வசதி வாய்ப்புக்களைக் கொண்டு காணப்படுவதுடன், அதிகமாக பயன்படுத்தப்படாத காணிகள் வெறுமனே இருக்கின்றமையானது, முதலீட்டு செயற்பாட்டுக்கு உந்துசக்தியாக அமைவதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஓய்வூதிய தின நிகழ்வுகள், திருகோணமலை மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.புஷ்பகுமார தலைமையில் இன்று நடைபெற்றப் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஓய்வூதியம் பெற்றவர்கள் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உங்களுடைய பங்களிப்பை வழங்குதல் வேண்டும் எனவும், விஷேடமாக தனியார் துறையில் இணைந்து செயற்படல் மற்றும் காத்திரமான தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் இச்செயற்பாட்டை மேலும் வலுவுள்ளதாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களை மேற்பார்வை செய்வதற்கு குழுவொன்று அவசியமானது எனவும், சில உள்ளுராட்சி மன்றங்களில் ஒளிராமல் இருக்கின்ற மின் விளக்குகளை மாற்ற முடியாமல் இருக்கின்ற செயலாளர்கள் இருக்கின்றப் போது, அப்பிரதேசத்தினுடைய ஏனைய பிரச்சினைகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்து தீர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளதுடன், உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்குகின்ற சேவையை மகத்தான சேவையாக மாற்றியமைக்க, இம்மேற்பார்வைக் குழுவுக்கு பல்துறைச்சார் உத்தியோகத்தர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

உலகிலே தற்கொலை முயற்சிகளை அதிகளவில் மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் காணப்படுகின்றது. இதில் கிழக்கு மாகாணம் முதன்மை பெற்று காணப்படுகின்றமையானது கவலையளிப்பதாகவும், எனவே, இந்நிலையை மாற்றியமைக்க ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக உளநலப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என்றும், இதனை முன்னெடுக்க துறைசார் நிபுணர்களுடைய ஒத்துழைப்பும் தேவை எனவும் போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபே குணவர்த்தன மற்றும் ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகள் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.