பாரிய குற்றமிழைத்த புலி உறுப்பினர்களுக்கு விடுதலை இல்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அரசியல் இலாப நோக்கங்களுக்காக வடக்கில் எவ்வகையாக ஹர்த்தால் இடம்பெற்றாலும் பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்யப் போவதில்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பியகம பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வடக்கில் ஹர்த்தாலை ஏற்பாடு செய்து பொது மக்களின் வாழ்க்கை சீர்குலைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் இலாப நோக்கத்தில் அவர்களை அரசியல் கைதிகள் என்று அழைத்த போதிலும், அவர்கள் அவ்வாறான கைதிகள் அல்ல என்றும், யுத்த காலத்தில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்றவர்களை நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்க முடியாது என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தாமதமிருப்பின் அதனை விரைவுபடுத்தி நாட்டில் காணப்படுகின்ற சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் அல்லது சந்தேகநபர்களை விடுவிக்க வேண்டுமெனவும், உண்மைய நிலமையை விளங்கிக் கொள்ளாமல் வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற ஹர்த்தால் மற்றும் போராட்டங்களின் பின்னால் அரசியல் இலாப நோக்கமே இருப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.