வடக்குக் கிழக்கில் டெங்கு அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மழையுடனான வானிலையை அடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் விஷேட டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளதுடன், 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணியின் ஆலோசனையின் பிரகாரம் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,58,854 பேர் டெங்கு காய்யசளால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 390 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.