பிரேசில் நாட்டில் போல்சனாரோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் – வாகனங்கள் தீ வைப்பு

முக்கிய செய்திகள் 3

உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.

அதிபர் பதவிக்கான போட்டியில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உள்பட மொத்தம் 9 பேர் களத்தில் இருந்தனர்.

போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது.

இதையடுத்து தேர்தல் முடிவுகளின்படி இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே சமயம் ஜெயீர் போல்சனரோ 49.10 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இருப்பினும் தனது தோல்வியை ஏற்க போல்சனாரோ மறுத்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக அவரது ஆதரவாளர்கள் நாட்டின் பல இடங்களில் போராட்டத்தில் நடத்த தொடங்கினர். இதனிடையே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பொதுமக்களை தூண்டிய குற்றச்சாட்டில், போல்சனாரோ ஆதரவு பழங்குடி தலைவரான ஜோஸ் அகாசியோ கைது செய்யப்பட்டார்.

இதற்கு போல்சனாரோ ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சிலர் வன்முறையில் இறங்கி வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, காவல் நிலையங்களை முற்றுகையிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நாட்டின் பல இடங்கள் போர்க்களம் போல் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் இந்த அனைத்து வன்முறைகளுக்கும் போல்சனாரோவே காரணம் என தற்போதைய அதிபர் லுலு டா சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.