குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 3

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் வழங்கியுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலம் மார்ச் 17 ஆம் திகதி தொடங்கி ஜூன் 17 ஆம் திகதி வரை 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19,620 இலங்கையர்கள் தற்போது குவைத்தில் செல்லுபடியான வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் விதிக்கப்படாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார், மேலும் குவைத்துக்குள் சட்டப்பூர்வமாக மீண்டும் நுழைய அனுமதிக்கப்படுவார்.

14.03.2024க்கு முன்னர், பணிபுரியும் இடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் தொழில் வழங்குனர் முறைப்பாடு அளித்துள்ள நபர்களுக்கும், 14.03.2024 வரை விசாயின்றி குவைத்தில் தங்கியிருந்த நபர்களுக்கு மாத்திரமே இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவிர, சம்பந்தப்பட்ட நபர்fகள் மீது காவல் நிலையங்களில் அல்லது நீதிமன்றங்களில் வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் இருந்தால் இந்த பொது மன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி குவைத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் ஒருவர், குவைத்தில் சட்டப்பூர்வமாகத் தொடர்ந்து தங்க நினைத்தால், குவைத் அரசாங்கம் நிர்ணயித்த அபராதத் தொகையைச் செலுத்தி, செல்லுபடியாகும் விசாவைப் பெற்று, அந்நாட்டில் தங்குவதற்கான வாய்ப்பை குவைத் அரசு வழங்கும்.

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்த சந்தர்ப்பம் சிறந்த வாய்ப்பாக இருப்பதால், சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்தால், இது குறித்து அறிவித்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர உதவிடுமாறு  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொதுமக்களை கோரியுள்ளது.