தேசிய தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை வல்லுநர்கள் கருத்து!

முக்கிய செய்திகள் 2

விளையாட்டு துறையில் தேசிய தரத்திலான தகுதியுடன் வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை இல்லாமையால் யாழ் மாவட்டத்தின் விளையாட்டு துறை தரத்தில் முன்னேற்றம் காணமுடியாதுள்ளதாக விளையாட்டுத் துறைசார்தோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் குறித்த தரநிலை வீழ்ச்சிக்கு துரிதமாக தீர்வுகாணப்படுவதன் அவசியம் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருதொகுதி விளையாட்டுத் துறைசார் தரப்பினர் யாழ் மாவட்டம் விளையாட்டுத் துறையில் கடுமையான சரிவை கண்டுவருவதாகவும் இதற்கான காரணங்கள் பல்வேறு பொறிமுறைகளில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டி கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே குறித்த கோரிக்கையை அவர்கள் அமைச்சரிடம் முன்வைத்திருந்தனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில் -

யாழ் மாவட்டத்தில் குறிப்பாக பாடசாலைகளிலிருந்தே விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு அடித்தளமிடப்பட்டு வருகின்றது. அதேபோன்று இங்கு பிரத்தியேகமாக விளையாட்டு துறையை பயிற்றுவிப்பதற்கான பொறிமுறையும் சார் கட்டமைப்பும் இல்லை.

குறிப்பாக பாடசாலைகளில் மிக கஸ்டப்பட்டு மாணவர்களை விளையாட்டுக்களின் துறையில் பிரகாசிக்கச் செய்ய தொடங்கினால் அந்த பயிற்சியாளர்களாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

இதனால் குறித்த பாடசாலையின் அந்த விளையாட்டு பயிற்சி வேறொரு ஆசிரியரிடம் கைமாறும் போது அதில் குழப்ப நிலைகளும் தளர்வுகளும் ஏற்படும் சூழல் காணப்படுகின்றது.

இதேவேளை மாணவர்களின் சூழலுக்கேற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் தம்மை மாற்றியமைத்து வீரர்களின் திறமைகளை உருவாக்கி வரும் நிலையில் இவ்வாறான இடமாற்றங்கள் வரும்போது பல பாடசாலைகளில் மீண்டும் அத்துறையை ஆரம்பத்திலிருந்து தொடங்கவேண்டிய நிலையும் உருவாகின்றது.

இது பெரும்பாலும் கிராமப்புற பாடசாலைகளை பாதிக்கிறனது. இதேநேரம் கிராமப்புற பாடசாலைகளில்தான் அதிகளவான விளையாட்டு தினறன் மிக்க வீரர்கள் இருக்கின்றனர்.

இதேவேளை விளையாட்டுத்துறையில் தேசிய ரீதியில் எமது மாகாணம் 7 ஆவது நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் அதிகளவான இளைஞர்கள் இருந்தும் இந்த நிலைக்கு காரணம் அத்துறையை வலுவானதாக பரிணமிக்கச் செய்யும் வகையிலான பொறிமுறை இன்மையே ஆகும்.

இதை மாற்றியமைத்து எமது மாணவர்கள் விளையாட்டுத்துறையில் தேசியரீதியில் சாதனையாளர்களாக உருவாக்கப்பட நவீனத்துவத்துக்கேற்ற வகையிலான விளையாட்டுத் துறைசார் அனைத்து வளங்களும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

அதேபோன்று நிர்வாக கட்டமைப்புகளிலும் புதிய உத்திகள் கொண்டவரப்படவேண்டியது அவசியமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

குறித்த கருத்துக்களை அவதானத்தில் கொண்ட அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்வகளை காண முயற்சிப்பதாகவும் அத்துடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்வடயத்தை உள்ளடக்குவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.