இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் – ஜனாதிபதி ரணில்

முக்கிய செய்திகள் 2

இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது கடினமானது எனப் பலரும் கூறியபோதும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒற்றுமை ஒன்றே தேவையெனவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் (18) நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நுவரெலியா, ஹங்குரங்கெத்த, மஸ்கெலியா, கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சிலர் விமர்சித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவு கிடைத்தால் அந்த திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக மாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பழமையான அரசியலில் ஈடுபட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், நாட்டுக்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்தீரத்தன்மையினால் இந்த வருடம் மக்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வோடு, மக்களின் வருமான மூலங்களும் அதிகரித்து வருவதாகவும், இந்த பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இளம் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்த அவர்கள், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தமது முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

அடுத்த 02 வருடங்களில் நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை மேற்கொண்டு 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவை வழங்குவோம் என நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத் குறிப்பிட்டார்.