தியத்தலாவை கோர விபத்து – இதுவரை 07 பேர் உயிரிழப்பு

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 20 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் சிறுமி ஒருவரும் உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் விபத்தில் உயிரிழந்த 07 பேரில் 4 பந்தய உதவியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினையடுத்து நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து பந்தய போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.