யாழில் தலைதூக்கிய கசிப்பு உற்பத்தி; நாகர்கோவிலில் நுழைவாயில் கதவுகளும் திருட்டு!

முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகளை விசமிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை (28) களவாடி சென்றுள்ளனர்.

நாகர்கோவில் மேற்கு J/424 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மரமுந்திரிகை பயிற்செய்கை திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

அத் திட்டத்தின் ஒரு பகுதியாக முப்பது ஏக்கர் நிலப்பரப்பை சீர் செய்து தூண், முட்கம்பிகள் கொண்டு வேலி அமைக்கப்பட்டு முப்பது பேருக்கும் பிரிக்கப்பட்டு முப்பது கிணறுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

அதனை பராமரிப்பதற்க்காக நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்பிலும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அனுசரணை ஊடாகவும் இந்த திட்டம் மாவட்ட செயலகம் மூலமாக பிரதேச செயலகத்தின் இணைப்பின் ஊடாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது.

இத் திட்டம் முன்னோக்கிய ஒரு செயற்திட்டமாக காணப்பட்டதோடு இரண்டு வருடங்களில் மர முந்திரிகையிலிருந்து பயனையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இந்த திட்டத்திற்காக வீதியமைப்பதற்கான ஒழுங்கைகள் இடப்பட்டு முப்பது காணிகளையும் இணைப்பதற்காக பொதுவாக ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அந் நுழைவாயில் கதவினை நேற்று முன்தினம் இரவு அதனை உடைத்து களவாடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கிராம சேவையாளர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நாகர்கோவில் பகுதியில் கசிப்பு உற்பத்தி, இளநீர் பறித்தல், கொள்ளை என நாகர்கோவில் பகுதியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால், தமது உடமைகளை பாதுகாத்து தருமாறும் நாகர்கோவில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.