எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது: லொஹான் ரத்வத்த

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும், மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மரபுரிமை வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதுடன் ஒரே நேரத்தில் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ஒரு விவசாய நாடு. மேலும், மகாவலி அதிகார சபையும் விவசாயத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது. இதனால், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்கள் தொடர்பான விவசாய உற்பத்திகள் எமது அமைச்சின் கீழ் வருகின்றன.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எமது நாட்டில் 10 பெரிய அணைகள் உள்ளன. நாட்டிற்குத் தேவையான மின்சார உற்பத்திக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என்றே கூற வேண்டும். எனவே இவ்விரு அமைச்சுக்களையும் சரியாகப் பயன்படுத்தினால் விவசாயத்தில் நம் நாடு தன்னிறைவு அடையலாம்.

அதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கள் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது இந்நாட்டின் விவசாயத் துறையை உயர்த்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதை எளிதாக்கியுள்ளது. விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் சொல்ல வேண்டும்.

அத்துடன், மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி தொடர்பில் சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன. உறுமய திட்டத்தை அமுல்படுத்துவதுடன் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொலன்னறுவை மாவட்டத்தில் மேலும் 6000 பேருக்கு இந்த வார இறுதியில் இலவசப் பத்திரங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.