குளியாபிட்டிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு பிணை

முக்கிய செய்திகள் 1

குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று (06) தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபரை தலா 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க குளியாபிட்டிய நீதவான் ரந்திக லக்மால் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டர் சுஜித் பெர்னாண்டோ எனும் 'சிங்கித்தி' என்பவராவார்.

குளியாபிட்டிய, கபலேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சுசித ஜயவன்ச என்ற நபரே சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.

இறுதியாக காதலியின் தந்தையின் தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

குறித்த நபர் காதலியின் தந்தை மற்றும் மேலும் 2 நபர்களால் தாக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி குறித்த இளைஞனை பிரதேசத்தில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காதலியின் தந்தை கூறியதாக, கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னர் பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி, காணாமல் போன இளைஞனின் காதலியான அவரது மகள் மற்றும் இரண்டு மகன்கள், பிரதான சந்தேகநபரின் சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வீடுகளை விட்டு வெளியேறி பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.