நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிக்கும் இந்தியர்கள்: உயர்நீதிமன்றின் உத்தரவு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

இலங்கை கடற்பரப்பில் தென்னிந்திய மீனவர்கள், பொடம் ட்ரோலிங் எனப்படும் வலையைப் பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில், வெளிவிவகார அமைச்சை பிரதிவாதியாக பெயரிடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு மீனவர்கள் மற்றும் சுற்றாடல் நீதி மையம் ஆகியவற்றினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று(6) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்டது.

இதன்போது, கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து ஆராய வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் மன்றுக்கு அறிவித்தார்.

இதற்கு வெளிவிவகார அமைச்சின் உதவிகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி வழக்கின் பிரதிவாதியாக வெளிவிகார அமைச்சையும் உள்வாங்குமாறு கோரியுள்ளார்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், மனுவின் பிரதிவாதியாக வெளிவிவகார அமைச்சை பெயரிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.