கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் 4,442 கோடி

விளையாட்டு

இந்தியாவில் அடுத்த 05 ஆண்டுகளுக்கு நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமம் 4,442 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்காக இந்த ஏலம் கோரப்பட்டுள்ளது. இந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி உரிமம் முதல் தடவையாக இணையத்தளம் ஊடாக ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த ஏலம் நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில், முன்னணி நிறுவனங்கள் தொலைக்காட்சி உரிமத்தை பெறுவதற்கு ஏலத்தை கோரிவருவதனால், இந்த தொகை இன்னும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்காக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் 3,851 கோடி இந்திய ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி உரிமத்தை 4,442 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் கோரப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 102 சர்வதேச போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.