கடலில் குழந்தையைப் பிரசவித்த பெண்: நயினாதீவில் சம்பவம்!

முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார்.

எனினும் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு சேவையில் ஈடுபடாததால் , பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை குறித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த படகில் பயணித்த பெண்களே அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும் , அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.