வலி. வடக்கில் மக்கள் போராட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ். வலி வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வசாவிளான் சமூகநலன் அமைப்பினர் ஏற்பாடு செய்த இப்போராட்டம் இன்று காலை, வசாவிளான் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் வாசஸ்தலம் வரை சென்றுள்ளது.

30 வருடங்களுக்கும் மேலாக படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது நிலங்களை விடுவித்து தங்கள் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியதுடன், வலி வடக்கில் படிப்படியாக நிலவிடுவிப்பு இடம்பெற்ற போதும் தற்போதுவரை தங்களின் நிலங்கள் விடுவிக்கப்படாதமை, தமக்கு ஏமாற்றமளிப்பதாகவும், ஜனாதிபதி இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

படைத்தரப்பினர் தமது கோரிக்கைகளை சாதகமாக பரீசிலிக்க வலியுறுத்தி மகஜர் ஒன்றையும் யாழ். மாவட்ட கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சியிடம் மக்கள் கையளித்த போது, இந்த மகஜர் தொடர்பில் தாம் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக யாழ். மாவட்ட கட்டளை தளபதி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.