வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்படவுள்ள 50,000 வீடுகளில், முதற் கட்டமாக 25,000 வீடுகளை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடோல் மற்றும் சீமெந்தினை பயன்படுத்தி 50,000 சம்பிரதாயபூர்வமான, வீடுகளை அமைப்பதற்கான அனுமதியை அமைச்சரவை ஏற்கனவே வழங்கியுள்ளமைக்கு அமைய, ஒப்பந்தக்காரர்களிடமிருந்து யோசனைகள் கோரப்பட்டதுடன், அவர்களில் இலாப நோக்கமற்ற நான்கு நிறுவனங்களின் யோசனைகள் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளதென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் கொள்முதல் குழு சிபாரிசு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக 25,000 வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில், குறித்த நிறுவனங்களின் யோசனைக்கு அமைய செயற்படுவது தொடர்பில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.